![trisha](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/stp-tamil/media/media_files/TqPiCwzydd8Yd4dnCIBl.png)
ஆண் நடிகர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிக்கப்படுகின்றனர். அவர்களின் திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெண் நடிகர்களின் தோற்றத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அவர்கள் கேளிகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர்.
சமீபத்தில் கூட நயன்தாரா அவரது புது படத்தின் தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டார். அந்த தோற்றத்திற்கு பல பேர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர் மற்றும் சமூக வலைத்தளங்களில் இரக்கமற்ற கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்கிறார். தென்னிந்தியாவின் வெற்றிகரமான பெண் நடிகர்களில் இவரும் ஒருவர். சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் மற்றும் மற்ற பெண் நடிகர்களுக்கு வழி வகுத்தவர். வயதாகி விட்டது என்பதற்காக இத்தனை சாதனைகளையும் புறந்தள்ளுவது எப்படி நியாயமாகும்? எந்தப் பெண் நடிகருக்கும் வயதாகிறது என்பதற்காக திறமைக்கு மதிப்பு தரவில்லை என்றால் அது எப்படி நியாயமாகும்?
இந்திய திரைப்படத் துறையில் பாலின பாகுபாடும், பாலின சமத்துவ இன்மையும் அதிக அளவில் உள்ளது. சினிமாவை தவிர மற்ற துறைகளில் ஆணிற்கும், பெண்ணிற்கும் ஓய்வு வயது ஒன்றாக தான் இருக்கிறது. சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை கடந்தால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து விடுகிறது என்பதை உண்மை.
திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்ததற்கு பிறகும் பெரும்பாலான பெண்கள் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருந்த விலகி துணை கதாபாத்திரங்களில் அம்மாவாக, தங்கையாக, அத்தையாக நடிக்க வேண்டி உள்ளது. இது அவர்களின் திறமைக்கு அநியாயம் மற்றும் அவமரியாதையாக இல்லையா?
பெண் நடிகர்களின் வாய்ப்புகள் 35 வயதில் முடிந்து விடுகிறது. ஆனால், ஆண்கள் தொடர்ந்து கதாநாயகனாக, அவர்களின் பாதி வயதை கொண்ட கதாநாயகியுடன் நடிக்க முடிகிறது. வயது எப்போதும் ஆண் நடிகர்களுக்கு ஒரு தடையாக இருந்தது இல்லை. அவர்களின் நடிப்பு இன்னும் நிறைய பாராட்டுகளுடன் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அவர்களின் நடிப்பு, திரையில் வரும் நேரம், தோற்றம், நடனம் என அனைத்தும் போற்றப்படுகிறது. அதுவே திருமணமும், தாயும் ஆன ஒரு பெண்ணிற்கு வயது ஒரு தடையாக மாறிவிடுகிறது. பெண் நடிகர்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும் 30 வயதிற்கு மேல் அவர்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. நயன்தாரா இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர் மற்றும் அவர் தொழில்துறையில் முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் குறிப்பிட்ட வயதை கடந்தால், திருமணம் ஆவதால், பெற்றோர் ஆவதால் அவள் திறமையும், சாதனைகளும் மாறிவிட போவதில்லை. தோலில் சிறிய சுரங்கம் ஏற்பட்டால் என்ன? ஏன் ஆண்களுக்கு அப்படி ஆவது இல்லையா? ஆண் நடிகர்களும் பெண் நடிகர்களும் ஒர்க் அவுட் செய்வது, டயட் ஃபாலோ செய்வது, மேக்கப் அணிவது மற்றும் அழகுக்காக சில முறைகளை பின் தொடர்வது இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. ஆனாலும், ஏன் இந்த பாலின பாகுபாடு நிலவி வருகிறது? பேரன்களை உடைய சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிப்பதை ஏற்றுக் கொள்ளும் மக்கள், தாயாக இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் தோற்றத்திற்கு ஏன் இவ்வளவு விமர்சனங்களை தருகின்றனர்?
ஆண்களைப் போலவே பெண்களும் அவர்களை ஒரு நடிகராக உருவாக்கிக் கொள்ள, தனக்கான இடத்தை பிடித்துக் கொள்ள நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கின்றனர். அவர்களின் தனித்துவம் மூலம் குறிப்பிட்ட இடத்தை அடைய பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். திரை உலகமும், சமூகமும் இந்த அனைத்தையும் வெறும் வயதிற்காக புறக்கணிப்பது நியாயமற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வயது, திருமணம், தாய்மை இவை அனைத்தும் ஒரு பெண்ணின் திறமையையும் அவளின் கனவுகளையும் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. நயன்தாரா, திரிஷா போன்ற பெண் நட்சத்திரங்கள் 20 வருடங்களுக்கு மேல் இந்த துறையில் இன்னும் வெற்றி காண்பது, இந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பல எதிர்மறையான விஷயங்களை மாற்ற தொடங்கியுள்ளது. இது மாற்றத்திற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் மற்றும் பல பெண்களுக்கு நம்பிக்கையை தருவதாக அமையும்.
மற்றொரு பெரிய மாற்றமாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 2023 முதல் திருமணம் ஆன பெண்களும், குழந்தை பெற்ற பெண்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சினிமாவிலும், சமூகத்திலும் உள்ள வழக்கமான மனநிலை, பாலின சமத்துவமின்மை மற்றும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைக்க வேண்டிய நேரம் இது.
Suggested Reading: "திருமண வாழ்க்கை மற்றொரு தொடக்கமாக இருக்க வேண்டும்" நயன்தாரா