IT வேலையை விட்டு மக் கேக்ஸ்(Mug Cakes) ஆரம்பித்த ஸ்வேதா

Devayani
15 Feb 2023
IT வேலையை விட்டு மக் கேக்ஸ்(Mug Cakes) ஆரம்பித்த ஸ்வேதா

இன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கேக் வெட்டி கொண்டாடுவது என்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. அதற்கு ஏற்றது போல கேக்குகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு விதவிதமாக கேக்குகளை செய்ய தொடங்கிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் இது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அதில் பல வகையான கேக்குகளை கொண்டு மக் கேக் என்ற கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கடை மக்களின் கவனத்தை பெரிய அளவில் அதன் தனித்துவத்தால் ஈர்த்து வருகிறது.

அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்றவாறு, வாடிக்கையாளர் எப்படி கேட்கிறார்களோ அப்படியே பல வகைகளில் கேக்குகளை செய்து வருகின்றனர். சாதாரணமான கேக்குகள் மட்டும் இன்றி சர்ப்ரைஸ் கேக், ஃபிளவர் பாட் கேக்,  மக் கேக், இன்ஃபியூஸர் கேக், பபுள் கேக் என அனைத்து வகையான கேக்குகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

மக் கேக்(Mug Cake) பின்னால் உள்ள பெண்ணின் கதை:

ஸ்வேதா கிஷோர் என்பவர் தான் மக் கேக்கின் நிறுவனர். இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்தே துருதுருவென ஏதாவது செய்து கொண்டு இருந்த ஸ்வேதா வேலை செய்து கொண்டிருக்கும் போதே கேக்குகளையும் செய்ய தொடங்கினார். அவர் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் கேக்குகளை செய்து அதை தெரிந்தவர்களிடம் விற்றும் வந்தார். அப்பொழுது தான் மக் கேக்குகளை செய்ய தொடங்கினார்.

mug cake kilpauk

பிறகு முழு நேரமாக பேக்கிங் செய்யலாம் என முடிவெடுத்தபோது அவருக்கு பல குழப்பங்கள் இருந்தது. இது எந்த அளவுக்கு சரியான முடிவு என்றும், அதற்காக வேலையை விடுவது சரியா என்ற கேள்வியும் அவருக்குள் இருந்தது. அப்பொழுது தனது மேனேஜரிடம் வேலையை விடுவதாக இருக்கிறேன் என்று கூறிய போது அவர் ஐடியில் வேலை செய்தால் ஏற்படும் நன்மைகளை கூறி, இதை விட்டுவிட்டு நீ கேக் செய்ய போனால் உனக்கு எவ்வளவு வருமானம் வரும் போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளார். அதனால் ஸ்வேதா தனக்கு சில நாட்கள் அவகாசம் தரும்படி கேட்டுள்ளார்.

இவர் அவகாசம் கேட்ட அந்த ஐந்து நாளில் சென்னையில் உள்ள பல கடைகளுக்கு சென்று அவர்களுக்கு கேக் சப்ளை செய்வதாக கூறினார். அதில் 30 கடைகளில் அவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, தைரியத்துடன் அவர் வேலையை விட்டு முழு நேரமாக பேக்கிங் தொழிலில் ஈடுபட்டார்.

தொழிலின் ஆரம்ப காலம் நிறைய சவால்களை தரக்கூடியதாக இருக்கும். அப்படி இவருக்கும் நிறைய சவால்கள் இருந்தது. பெற்றோர்களை இதற்கு சம்மதிக்க வைப்பதில் இருந்து பொருட்கள் வாங்கி, கேக்குகளை செய்து, விற்பனை செய்யும் வரை அனைத்தையும் தனியாளாக இவரே பார்த்துக் கொண்டார்.

mug cake

ஒருமுறை மெட்டிரியல்ஸ் வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது, அந்த கடைக்காரர் எதுக்குமா இவ்வளவு பொருள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா தான் சொந்தமாக ஒரு தொழில் வைத்திருப்பதாகவும், அதற்காக இவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறினார். அதற்கு அந்த கடைக்காரர் எதுக்குமா உங்களுக்கு இந்த கஷ்டம், இந்த பிசினஸ் எல்லாம் எதுக்கு என்று கூறியுள்ளார். அதை கேட்ட ஸ்வேதா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்பதை போல் பதில் கூறிய பிறகு எப்போ கல்யாணம் பண்ணிக்க போற போன்ற கேள்வியை அவர் கேட்டுள்ளார்.

நமது சமூகத்தில் தொழில் முனைவு என்றாலே அதை ஆண்கள் மட்டும் தான் செய்ய முடியும் என்ற எண்ணம் இன்றும் பலரிடம் இருக்கிறது. ஏனென்றால் தொழில் செய்யும் போது பலரை சந்தித்து, அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, பல இடங்களுக்கு செல்ல வேண்டும். இப்படி அதில் நிறைய வேலை இருப்பதால் அது ஆண்களால் மட்டும் தான் அதை செய்ய முடியும் என நினைக்கின்றனர். ஆனால், ஸ்வேதா போன்ற பெண்கள் இந்த பாகுபாடுகளை எல்லாம் உடைத்து பெண்களாலும் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். 

mug cake chennai

ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டு இருந்தாலும் ஒரு வருடத்திற்கு பிறகு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் கீழ்ப்பாக்கத்தில் ஒரு சிறிய கடையையும் அவர் திறந்து உள்ளார். மேலும் ஜோஸ் டாக்கில் பேசிய போது "வெற்றி வேண்டுமென்றால் பிடிவாதமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இவர் மாஸ்டர் செஃப் போன்ற போட்டிகளில் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Suggested Reading: இன்னைக்கு என்ன சமையல் சுனிதாவின்  பயணம்

Suggested Reading: Black Sheepஇன் இவள் சீரிஸ் உருவான கதை⁠⁠⁠⁠⁠⁠⁠

அடுத்த கட்டுரை